தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு மகனுமான நடிகர் அருள்நிதிக்கும், நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் அடுத்த மாதம் 8–ந்தேதி திருமணம் நடைபெறுகிறது.
அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த திருமண விழாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்ட திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் மு.க.தமிழரசும் திருமண அழைப்பிதழை முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார்கள்.
இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்திக்க கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு 12.05 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் மு.க.தமிழரசும் சென்றிருந்தார். கட்சி அலுவலக வாசலில் அவர்களை தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
அங்கு விஜயகாந்தை சந்தித்து திருமண அழைப்பிதழை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இருவரும் 10 நிமிடம் நேரம் நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த சந்திப்பின் போது பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.